மனைவி மக்கள் விஷயம்

பத்னி, புத்ரர் விஷயம் வேறு. அவர்கள் நம்மைவிட ஸ்தானத்தில் சின்னவர்கள். அதனால் நியாயமாக அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளைப் பூர்த்தியாகப் பண்ணுவதற்கு மேலாக அவர்கள் நம்மைத் தங்கள் ஸமாசாரங்களிலேயே இழுத்து லோகஸேவை செய்யவொட்டாமல் தடை பண்ணினால் அதற்குக் காது கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அதை மீறியும் நம்மாலான லோகப்பணிகளைச் செய்யத்தான் வேண்டும். சாஸ்த்ரப்படி நம் கட்டுப்பாட்டின்கீழ் இருப்பவர்களான பத்னி, புத்ரர்களையும் நாம் பொதுத் தொண்டுகளில் ஈடுபடுத்த வேண்டும். ஆனால் எந்தப் பக்கமானாலும் அதில் மிகையாகப் போய்விடக்கூடாது. பெண்டாட்டி, பிள்ளைகுட்டிகளைக் கவனிக்காமல் பரோபகாரம் என்று புறப்படக்கூடாது.