உணர்ச்சிபூர்வமான விஷயங்கள்

ஸென்டிமென்டலாக [உணர்ச்சிப் பூர்வமாகமனஸை உறுத்துகிற விஷயங்களையும் ஆசாரங்களில் சொல்லியிருக்கிறது. இன்னொருத்தர்மேலே நம் கால்பட்டுவிட்டால், புஸ்தகத்தை மிதித்துவிட்டால் நமக்கே என்னமோ குற்றம் பண்ணினாற்போலத் தோன்றுகிறது. பெரியவர்களாக இருக்கிறவர்கள் வருகிறபோது நாம் உட்கார்ந்திருந்தாலோ, படுத்திருந்தாலோ, அவர்களுக்கு எதிரே காலை நீட்டிக் கொண்டிருந்தாலோ, நமக்காகவே உள்ளே ஏதோ அபசாரம் பண்ணிவிட்டது போலத் தோன்றுகிறது. நல்ல லக்ஷ்மீகரமாக ஒரு ஸுமங்கலி நாம் காரியத்தை ஆரம்பிக்கும்போது வந்தாலோ, வெளியே கிளம்பும்போது எதிர்ப்பட்டாலோ ஒரு மனநிறைவு உண்டாகிறது. இதெல்லாமே சாஸ்திரமாகவும் வந்து விடுகின்றன.

இதே ஸமயத்தில் அமங்கலியானவர்கள் ரொம்பவும் வருத்தப்படும்படியாகவும் அவர்களை ஒதுக்கி வைத்து விதிகள் [புஸ்தகத்தில்] போட்டிருக்கிறது. தாங்கள் நல்ல வைராக்யத்தோடு, ஈஸ்வர ஸ்மரணை தவிர வேறே பந்த பாசம் இல்லாமல் ஜீவித்துக் கடைத்தேற வேண்டுமென்ற நல்லெண்ணத்தில்தான் இப்படி ஒதுக்கி வைத்திருக்கிறார்களென்று அவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதே சாஸ்திரத்தில் ஒற்றைப் பிராமணன் எதிரே வந்தால் அபசகுனம் என்றுந்தானே சொல்லியிருக்கிறது? இதன்படி ஒரு பெரிய வேத கனபாடிகள் தனியாக எதிரே வந்தாலும் அபசகுனம் என்றுதானே ஆகிறது? அதனால் இதெல்லாம் நம் புத்தி பூர்வமாக ஸமாதானம் சொல்கிற ஸர்க்கிளுக்குள் இல்லை.