கோகுலாஷ்டமியில் க்ருஷ்ண பரமாத்மாவைப் பூஜிக்கும் போதும் கடைசியில் சந்த்ரனுக்கு அர்க்யம் கொடுக்கவேண்டுமென்று இருக்கிறது. பின்னாலே நம் கதையின் போக்கைப் பார்த்தால் விக்நேச்வரர் மனஸை அநுஸரித்தே க்ருஷ்ணர் தம் பூஜையிலும் இப்படி சந்த்ரனை பஹுமானிக்கும்படி ஆக்ஞை செய்திருப்பாரோ என்று தோன்றுகிறது.
இன்னொரு கதைகூடச் சொல்வதுண்டு. ராமர் ஸூர்ய வம்சத்தில் அவதாரம் பண்ணி ரவிகுல திலகன், இனகுல திலகன் என்றெல்லாம் பேர் வாங்கினதைப் பார்த்து சந்த்ரனுக்கு துக்கம் துக்கமாக வந்ததாம். அவர்கிட்டே போய், ‘என்னை மட்டும் அலக்ஷ்யபடுத்திவிட்டீர்களே!’ என்று அழுதானாம். உடனே அவர், ‘அழாதே! உன் பேரை என் பேரோடேயே சேர்த்துக் கொண்டுவிடுகிறேன். இனிமேலே என் பேர் ராமசந்த்ரன் தானென்று கெஜட்டிலேயே போட்டுக் கொண்டு விடுகிறேன். இதுமட்டும் போதாது என்றால் அடுத்த அவதாரம் உன் வம்சத்திலேயே பண்ணுகிறேன்’ என்று வாக்குக் கொடுத்தாராம். அதனால்தான் க்ருஷ்ணாவதாரம் சந்த்ரவம்சத்தில் பண்ணினாராம். அதோடுகூட தமக்கு ஜனனோத்ஸவ பூஜை பண்ணும்போதே சந்த்ரனை நினைத்து அர்க்யம் தரவேண்டும் என்று ஆக்ஞையிட்டு விட்டாராம்.