உபநிஷத்தில் பரமாத்ம தத்வத்தை அறிவதற்காக “குருவையே தஞ்சமாக அடையவேண்டும்” என்று சொல்கிற இடத்தில் அவருக்கு இரண்டு லக்ஷணங்கள் சொல்லியிருக்கின்றன. ஒன்று, அவர் “ச்ரோத்ரியராக” இருக்கவேண்டுமென்பது. ச்ரோத்ரியர் என்றால் வேதத்தை கரைத்துக் குடித்திருக்க வேண்டும். இது அவருடைய கல்விச் சிறப்பை, அதாவது அறிவுச் சிறப்பைக் காட்டுவது. இன்னொரு லக்ஷணம் அவர் “ப்ரஹ்ம நிஷ்டராக” இருக்கவேண்டுமென்பது. அதாவது பரமாத்மாவைப் பற்றி அறிவினால் படித்துக் கரை கண்டதை அநுபவமாக, ஸ்வாநுபூதியாகத் தம்முடைய ஹ்ருதயத்தில் உணர்ந்து அதில் நிலைத்து நிற்பவராயிருக்க வேண்டும். அன்பு, த்யாகம், பரோபகாரம், ஸத்யசீலம் முதலான உத்தம குணங்களைப் பெற்றிருந்தாலொழிய இந்த ஸ்வாநுபூதி கிட்டாது. அதாவது, உபநிஷத் காட்டுகிற ஆசார்யன் தற்கால ப்ரொஃபஸர்களைப் போல அறிவாளியாயிருந்தால் மட்டும் போதாது. ஆத்மாநுபவத்திலேயே கொண்டு சேர்க்கிற அளவுக்கு உசந்தகுண ஸம்பத் வாய்ந்தவனாகவும் இருக்கவேண்டும். Qualities of head and heart என்று சொல்கிறார்களே அப்படி மூளை, ஹ்ருதயம் இரண்டிலும் பெரியவனாக இருக்க வேண்டும். சிஷ்யன் கூடவே வஸிப்பதான குருகுல முறையே அவனை இப்படி ஆக்குவதற்கு ஸாதகமாக இருந்தது.
அதாவது சிஷ்யனை குரு உருவாக்குகிற மாதிரியே சிஷ்யர்களும்தான் குருவை உருவாக்குகிறார்கள்.