கிராமப் புள்ளி விவரங்கள்

நான் ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டிருப்பதில் பஞ்சாயத்து போர்டு (இப்போது என்னவோ தமிழ்ப் பெயர் சொல்கிறார்கள்) உள்ள கிராமங்களின் எல்லையில் ஒரு போர்ட் போட்டு வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன் (பஞ்சாயத்து “போர்ட்” இல்லை!) அதில் இந்த கிராமத்தில் இவ்வளவு ‘பாபுலேஷன்’, இத்தனை பரப்பு, இன்ன பயிர் விளைகிறது என்பது முதலான விவரங்கள் போட்டிருக்கிறது. அதிலே படித்தவர் எவ்வளவு, படிக்காதவர் எவ்வளவு என்ற விவரமும் இருக்கிறது. அது மாத்திரமில்லை. இங்கிலாண்ட், அமெரிக்கா, ஜப்பான் முதலிய நாடுகளில் படிப்பாளிகள் எத்தனை சதவிகிதம் என்பதைக் காட்டி, நம் படிப்பாளிகள் எத்தனை சதவிகிதம் என்பதைக் காட்டி, நம் நாட்டில் அதையெல்லாம்விட எவ்வளவு குறைச்சல் சதவிகிதமே படிப்பாளிகள் இருக்கிறார்கள் என்றும் போட்டிருக்கிறது. அந்த தேசங்களைப்போல நம் தேசத்தையும் படிப்பிலே முன்னுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஆட்சியிலிருப்பவர்களுக்கு எண்ணமிருப்பதாலேயே, “இப்படி எழுதி வைத்தாலாவது ஜனங்கள் மனஸில் தைத்து, அவர்கள் பசங்களை ஸ்கூலுக்கு அனுப்பாதவர்களிடம் எடுத்துச் சொல்லி ப்ரசாரம் பண்ணிக் கல்வியைப் பரப்பட்டும்” என்ற உத்தேசத்தில்தான் இதுபோலச் செய்திருக்கிறார்கள்.