புதுக்கதையும் பழங்கதையும்

இந்தப் பழைய கதையெல்லாம் இப்போது எதற்கு என்றால் புதுக்கதைக்குப் பழைய கதையே புத்துயிர் தந்து சீர்ப்படுத்த முடியும் என்பதால்தான். பழைய கதைகளான ராமாயணமும் பாரதமும் மற்ற புராணங்களுந்தானே அதற்கப்புறம் வந்திருக்கிற எத்தனையோ தலைமுறைகளின் கதைகளை நல்லவழியில் கொண்டுபோயிருக்கின்றன? இக்கால நாவல்கள். ஸினிமாக்கள் பலவற்றுக்குக்கூட அவைதானே மூலமாயிருக்கின்றன?

ஜனநாயகம், ஜனநாயகம் என்று மேல்நாடுகளில் முழங்குவது நம் நாட்டிலும் ஏற்பட்டுவிடுகிறது. க்ராம பஞ்சாயத்து போர்டு முதல் டில்லி பார்லிமெண்ட் வரையில் பொதுஜன வோட்டில் எலெக்ட் ஆகும் நபர்களைக் கொண்டு உருவாக்கி, க்ராம கார்யம், ஜில்லா கார்யம், மாகாணக் கார்யம், பாரத தேசம் பூராவுக்குமான கார்யம் ஆகியவற்றை நடத்த ஏற்பாடாகிவருகிறது. பொது ஜனங்களுக்கு நற்குணங்கள் அதிகரிக்கவோ, அவர்கள் தர்ம மார்க்கமான புண்ய மார்க்கத்தில் போய் ஈசனருளை அடையவோ இது உதவுகிறதா, நிஜமாகவே தேச க்ஷேமத்துக்கும் ஸமூஹ நலனுக்கும் உதவுகிறதா, அல்லது ஜனங்களைக் கெடுத்து சிலருடைய நலனை மட்டும் பேணுவதற்கு ஸஹாயம் செய்கிறதா என்பதைத்தான் கவனிக்க வேண்டுமே தவிர, இது ரொம்ப மாடர்ன் ஆனது, இதில ஈக்வாலிடி (ஸமத்வம்) இருக்கிறது என்ற காரணங்களுக்காக மாத்திரம் இம் முறையை ஏற்பது ஸரியல்ல. பின்னே சொன்னவை (அதாவது நவீனக் கொள்கை என்பதும் ஸமத்வம் என்பதும்) தேசத்தின் அல்லது க்ராமத்தின் தூய்மையான, தார்மிகமான நிர்வாஹம் என்ற முக்ய நோக்கத்துக்கு நேர் தொடர்பில்லாத புறக் காரணங்கள்தான். இவற்றைப் பெரிசுப்படுத்தி முதலிடம் தருவதானால் முக்ய ப்ரயோஜனத்துக்கு ஹானி உண்டாகுமெனில் அது கொஞ்சமும் புத்திசாலித்தனமாகாது.