கட்டவிழ்த்து விட்டால் மோக்ஷம். கட்டிலேயே இருக்கப் பண்ணுவது என்றால் மறுபடி ஜன்மா எடுத்து ஸம்ஸாரத்தில் உழழும்படிச் செய்வது. செத்த அப்புறம் இப்படி இன்னொரு உடம்பிலே போட்டுக் கட்டிவிடுவானோ என்ற பயம். இதிலேயே கிளை விடுவதாக இன்னொரு பயம், செத்ததற்கு அப்புறம் நரகத்திலே போய் மஹா கஷ்டப்பட வேண்டியிருக்குமோ என்பது. கர்மா மூட்டை ஸாதாரணத் தப்புகள் உள்ளதாயிருந்தால் இந்த பூலோகத்தில் மறு ஜன்மா எடுப்பதோடு போகும். இதுவே பெரிய கஷ்டந்தான், ஸம்ஸார பந்தந்தான். ஆனதால் பயத்துக்குக் காரணமாகிறது. ஆனால் ஸாதாரணத் தப்போடு போகாமல் மஹா பாபங்களைச் செய்து நாம் மூட்டை கட்டிக்கொண்டிருந்தாலோ, செத்தவிட்டு, மறுபடி இந்த லோகத்திலேயே இன்னொரு உடம்பு எடுப்பதற்கு முந்தி, இதைவிட ரொம்ப ரொம்பக் கஷ்டம் தருவதான நரக லோகத்துப் போய், சொல்ல முடியாத சித்ரவதைகள் படவேண்டும். மநுஷ உடம்பால் தாங்கமுடியாத சித்ரவதைகளைத் தாங்கி அவதிப்படுவதற்காகவே யாதனா சரீரம் என்ற ஒன்றை எடுத்துக் கொண்டு நரகத்திலே போய் படாதபாடு படவேண்டும்.
ஆகையால் மோக்ஷத்துக்கு ‘ஆப்போஸிட்’ ஸம்ஸாரம் என்றால், அதிலும் ரொம்ப ‘ஆப்போஸிட்’டாக இருப்பது நரகம். ஆகையினால் பூர்வசாஸ்த்ரங்களில், “பயங்கரமானது”, “கஷ்டமானது” என்று வருகிற இடங்களில் நரகத்திலே தள்ளுவதையே இவை குறிப்பாக ஆசார்யாள் பாஷ்யம் பண்ணுவதுண்டு.