அத்வைதம் தவிர அனைத்திலும் துக்கம்

ஸ்ருஷ்டியிலே ஈச்வரன் சாச்வத ஆனந்தம் தருவதாக எதொன்றையுமே படைக்கவில்லை. அவனே தர்சனம் தந்தால்கூட அது ஸர்வ கால ஆனந்தமாக இருப்பதில்லை. நாமதேவரைப் போல, ஸந்தரமூர்த்தி ஸ்வாமிகைளைப் போல தினந்தினம் அவனைப் பார்த்துக் கொட்டமடித்தவர்களைகூட அவ்வப்போது விட்டுப் பிரிந்து அழ அழவுந்தான் வைத்திருக்கிறான். க்ருஷ்ணனுக்கு ராதை உயிர் என்கிறார்கள். அவளையும் விரஹத்தில் அப்படியே தேஹமே சிதறிப்போய் விடுகிறாற்போலத் துடிக்கத்தான் விட்டிருக்கிறான். ஆசைப்பட்டால் அழுதுதான் ஆகணும் என்றே இப்படியெல்லாம் வைத்திருக்கிறான். அவனை வெளியிலே வேறாக வைத்து ஆனந்தப்படுகிறவரை அதுவும் சாச்வத ஸுகமில்லை, அத்வைதம் தவிர எல்லாம் துக்கம்தான் என்று காட்டவே இப்படிப் பண்ணுகிறான் போலிருக்கிறது.

இலக்கியம், ஸங்கீதம், சிற்பம் முதலானதுகளில் மனஸைக் கொடுத்தவர்கள் (அதாவது நிரம்ப ஆசை வைத்தவர்கள்) உசந்ததாக அவற்றில் ஒன்றைப் பார்த்து விட்டால் அதுமாதிரி பார்ப்போமா பார்ப்போமா என்று ஸதாவும் ஒரு தவிப்பாகத் தேடிக்கொண்டே இருப்பார்கள். தவிப்பது, தேடித்தேடி அலைகிறது என்றால் அது அசாந்திதான், துக்கம்தான்.

கெட்ட அநுபோகங்களும் இதே மாதிரி ஒருதரம் ருசி கண்டுவிட்டவர்களுக்கு ஆசை வெறியைத் தூண்டிவிடுகிறது. அப்புறம் அவர்களே கொஞ்சம் அறிவு தெளிந்த நிலையில், ‘ஐயோ, இத்தனை கீழ்த்தரமாக இருந்து விட்டோமேஎன்று தனக்குள்ளேயே குன்றிப்போய் மிகவும் துக்கப்படும்படி இருக்கிறது.