ஆசார்யாள் ஸ்தாபித்த மடங்களிலெல்லாம் சங்கராசாரியார், சங்கராசாரியார் என்றே எத்தனையோ ஸ்வாமிகள் வந்தாயிற்று. இவர்களில் தங்கள் ஸந்நியாஸ நாமாவிலேயும் ‘சங்கரர்’ என்று இருப்பவர்களாகவே ‘க்ருபா சங்கரர்’, ‘உஜ்-ஜ்வல சங்கரர்’, ‘மூக சங்கரர்’, ‘அபிநவ சங்கரர்’ என்றெல்லாம் இருந்திருக்கிறார்கள். ச்ருங்கேரியில் ‘வித்யா சங்கரர்’ என்று விசேஷ மரியாதையோடு ஒரு ஸ்வாமிகளைச் சொல்கிறார்கள். இவர்களிலும் ஸ்தோத்ரங்கள் செய்தவர்கள் இருந்திருக்கலாம். அப்படிப்பட்ட ஸ்தோத்ரங்கள் ஆதி சங்கரர் செய்ததாகவே நாளாவட்டத்தில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கக்கூடியது ஸஹஜமே! “ஸுத த்ரோஹி”யைச் சொல்லும் “சிவ புஜங்க” ஸ்தோத்ரமும் அப்படி ஒன்றாக இருக்கக்கூடும். ஆகையால் இந்த ஒரு ரெஃபரன்ஸைக் கொண்டு மட்டும் கால நிர்ணயம் செய்வது ஸரியாகாது.