ஐந்து முகம்கொண்ட சிம்ஹவாஹனர்

பஞ்சாஸ்ய மான்யர் மட்டுமில்லை; தாமே பஞ்சாஸ்யராக ஐந்து முகத்தோடு விளங்கும் ரூபம்தான் ஹேரம்பர். அற்புதமான மூர்த்தியாக இருப்பவர் அவர். ஐந்து கஜ சிரஸுகள்; பத்து கைகள். வாஹனம் என்னவென்றால் ஸிம்ஹம்; பஞ்சாஸ்யம்! ஸிம்ஹத்தைக் கண்டு யானை பயப்படாதது மட்டுமில்லை; அதை அடக்கி அதன் மேலேயே ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறது! பஞ்சமுகத்தால் தகப்பனாரை ஞாபகப்படுத்துவது போல ஸிம்ஹ வாஹனத்தால் தாயாரை ஞாபகப்படுத்துகிறார். அம்பாள் தானே ஸிம்ஹவாஹினி? மஹா கணபதி என்ற மூர்த்திக்கும் பத்துக் கை உண்டு. ஆனால் ஐந்து முகமோ, ஸிம்ஹ வாஹனமோ கிடையாது. ஹேரம்பர்தான் அப்படியிருப்பவர். நாகப்பட்டினம் நீலாயதாக்ஷி கோவிலில் செப்புத் திருமேனியாக ஹேரம்ப மூர்த்தி இருக்கிறார். திசைக் கொன்றாக நாலு திசைக்கு நாலு முகமும், அந்த நாலுக்கும் மேலே சேர்த்துக் கிரீடம் வைத்தாற் போன்ற ஐந்தாம் முகமுமாக ஐந்து யானைத் தலைகளைப் பார்க்கிறபோதே ஆனந்தமாக இருக்கும்..