இலங்கையில் ஸ்ரீஞானபைரவ சுவாமி தேவஸ்தானத் தின் ஆதீனகர்த்தாவாகத் தற்போது இருப்பவர் சாகித்யசிரோமணி பாலகிருஷ்ண ஐயர். அங்கே ஸ்ரீவித்யா சம்ஸ்க்ருத பாடசாலைக்கு ஆசிரியராகவும் இவர் இருந்து வருகிறார். தவிர, பல ஆன்மிகப் பணிகளை ஆற்றி வருபவர்.
சிதம்பரத்தில் சம்ஸ்க்ருதக் கல்லூரியில் இவர் பல ஆண்டுகளுக்கு முன் படித்தபோது, பெரியவாளின் அபரிமித ஞானம் சம்பந்தப்பட்ட ஓர் அனுபவத்தைச் சந்திக்க நேர்ந்தது. அதை பாலகிருஷ்ண ஐயரே சொல்லக் கேட்போம்.
“1944 முதல் 1949 வரை சிதம்பரம் மெய்யப்ப செட்டியார் சம்ஸ்க்ருதக் கல்லூரியில் வியாகரணம், தர்க்கம், சாகித்யம், மீமாம்சை போன்றவற்றைப் படித்து வந்தேன். என்னைப் போல் எண்ணற்ற மாணவர்கள் ஆர்வமுடன் வேதங்களை இங்கே கற்று வந்தார்கள்.
அது மார்கழி மாதம்… அப்போது மகா பெரியவா சிதம்பரம் நகருக்கு விஜயம் செய்திருந்தார். ஒரு நாள் அவர் திடீரென எங்களது கல்லூரிக்குள் அதிகாலை வேளையில் புகுந்தார். சாதாரணமாக வேதம் படிக்கின்ற மாணவர்கள் விடிகாலையில் எழுந்து, தங்களது அனுஷ்டானங்களைச் செய்ய வேண்டும் என்பது மரபு. வேதம் படிக்கின்ற இந்த மாணவர்கள் ஒழுங்காக – முறையாக இதை எல்லாம் அனுஷ்டிக்கிறார்களா என்பதைப் பார்வையிடுவதற்காகப் பெரியவா இங்கு வந்தாரோ என்று எங்களுக்குத் தோன்றியது.
கல்லூரிக்குள் ஒரு சுற்று வந்து விட்டு, விறுவிறுவென்று சாலையில் இறங்கி நடக்கத் தொடங்கி விட்டார். அவருடன் வந்த பண்டிதர்கள் நாலைந்து பேர் வேதம் ஓதியபடி அவரது நடைக்கு ஈடாக ஓடிக் கொண்டிருந்தனர். வேகமாக நடந்த பெரியவா தில்லை நடராஜர் கோயிலுக்குள் நுழைந்தார். அப்போது அங்கே அதிகாலை பூஜைக்கு வேண்டிய வேலைகளைச் செய்து கொண்டிருந்த தீட்சிதர்கள் இவரது திடீர் வரவால் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள். அவர்களில் தலைமை தீட்சிதர் போல் தோற்றமளித்த ஒருவர், பெரியவாளைப் பார்த்ததும் இவர் அருகே ஓடோடி வந்தார். ‘பெரியவா இப்படி திடுதிப்புன்னு சொல்லாம கொள்ளாம வந்துட்டேளே… சொல்லி இருந்தால் முறையா நாங்க வரவேற்றிருப்போமே?‘ என்று பவ்யமாகச் சொன்னார்.
பெரியவா அதற்கு, ‘பரவால்லை… இப்படி அமைதியா இருக்கிற கார்த்தால வேளைல அந்த நடராஜரைத் தரிசிக்கணும்னு ஆசை… அதான் பொறப்பட்டு வந்துட்டேன்‘ என்றவர், தில்லை அம்பலத்தானைத் தரிசித்து விட்டுப் புறப்பட்டுப் போனார்.
இதை அடுத்து ஒரு நாள் காலை பத்து மணி வாக்கில் எங்களது சம்ஸ்க்ருதக் கல்லூரிக்குள் வந்து விட்டார் பெரியவா. அப்போது எங்கள் வகுப்பில் நரசிம்ம சாஸ்திரிகளும், வெங்கட்ராம கனபாடிகளும் இருந்தனர். பெரியவாளைப் பார்த்ததும் இருவரும் தங்களது இருக்கையில் இருந்து எழுந்து அவருக்கு நமஸ்காரங்களைச் சொன்னார்கள். வகுப்புக்குள் நுழைந்ததும் எல்லா மாணவர்களையும் ஒரு முறை நோட்டம் விட்ட பெரியவா, பொசுக்கென நரசிம்ம சாஸ்திரிகளின் இருக்கையில் அமர்ந்தார். பெரியவாளே நாம் இருக்கும் இடம் வந்து தரிசனம் தருகிறாரே என்கிற சந்தோஷம் ஒரு பக்கம்… இன்னொரு பக்கம் ஓர் ஆசிரியரைப் போல் ஏதாவது கேள்விகளைக் கேட்டு நம்மைக் குடாய்ந்து விடுவாரோ என்கிற பயம் ஒரு பக்கம்… மொத்தத்தில் நான் உட்பட அனைத்து மாணவர்களும் கொஞ்சம் கலவரத்துடனே தான் காணப்பட்டோம்.
நாங்கள் பயந்தபடியேதான் நடந்தது. ஒவ்வொரு மாணவராகப் பார்த்து, ‘நீ என்ன படிக்கிறாய்?‘ என்று கேட்டார் பெரியவா. சம்பந்தப்பட்ட மாணவர்களும் தாங்கள் என்ன கற்கிறோம் என்கிற விவரத்தைச் சொன்னார்கள். இப்படி அடுத்தடுத்து ஒவ்வொரு மாணவரும் சொல்லிக் கொண்டு வரும்போது ஒரு மாணவன் தன் முறை வரும்போது எழுந்து, தான் கனம் (வேதங்களை ஏற்ற இறக்கங்களுடன் சொல்லும் முறை) கற்று வருவதாகச் சொன்னான். இதைக் கேட்டதும், பெரியவாளின் முகம் பிரகாசமானது. ‘எங்கே, ஒரு கனம் சொல், பார்க்கலாம்‘ என்றார் பெரியவா.
அந்த மாணவன் தொண்டையைச் செருமிக் கொண்டு ஒரு கனம் சொல்ல ஆரம்பித்தான். அவன் சொல்லிக் கொண்டிருந்தபோதே பெரியவா சற்று கண்ணயர்ந்து விட்டார். இதைப் பார்த்ததும், கனம் சொல்லிக் கொண்டிருந்தவன் சட்டென நிறுத்தி விட்டான். வகுப்பறையே பெரும் நிசப்தமாக இருந்தது. அதுவரை கண்ணயர்ந்தபடி காணப்பட்ட பெரியவா, சட்டெனக் கண்களைத் திறந்து, கனம் சொன்ன மாணவனைப் பார்த்து, ‘எங்கே, நீ சொன்ன கடைசி வரியை இன்னொரு முறை சொல், பார்ப்போம்‘ என்றார் நிதானமாக.
அவனும் மீண்டும் அதைச் சொல்ல ஆரம்பித்தான். அப்போது பெரியவா திடீரெனக் குறுக்கிட்டு, ‘நீ உதாத்தமும் அனுதாத்தமும் பிழையாகச் சொல்கிறாய். அதாவது உரத்துச் சொல்ல வேண்டிய இடத்தில் இறக்கியும், இறக்கிச் சொல்ல வேண்டிய இடத்தில் உரத்தும் சொல்கிறாய்‘ என்றார்.
வகுப்பறையில் இருந்த ஆசிரியர்களான நரசிம்ம சாஸ்திரிகளும் வெங்கட்ராம கனபாடிகளும் வியந்து போய் நின்றனர். மாணவர்களும் திகைத்தனர். அதாவது, கனத்தைக் கேட்டுக் கொண்டே பெரியவா கண்ணயர்ந்து விட்டதாகத்தான் எல்லோரும் நினைத்தனர். ஆனால், அந்தப் பரப்பிரம்மமானது கண்களை மூடி அந்த வேத ஒலியை அட்சரம் சுத்தமாக ரசித்துக் கொண்டிருந்தது என்பதைப் பின்னர்தான் உணர்ந்தோம்.
இதன் பின் தவறாக கனம் உச்சரித்த அந்த மாணவன் ஓடிப் போய் பெரியவாளின் கால்களில் விழுந்து நமஸ்கரித்தான். அவரும் அவனை ஆசிர்வதித்தார். ஞானத்தின் மொத்த வடிவமே மகா பெரியவாதான் என்பதை அந்த நாளில் நான் உணர்ந்தேன்“ என்கிறார் பாலகிருஷ்ண ஐயர்.