மற்ற மதங்களும் இப்படிப்பட்ட வித்யாஸங்களைப் பின்பற்றி வந்தால் நமக்கு இது குறையாகத் தோன்றாது. அவர்கள் நம்மை பரிஹஸித்து இந்த பேதத்தைக் குத்திக் காட்டுவதாலேயே நம்மவர்களுக்கும் இது தப்பாகத் தோன்ற ஆரம்பித்து விட்டது. ஆனால் நன்றாக ஆலோசித்துப் பார்த்தால் மற்ற எல்லா மதத்தையும்விட நம்முடைய மதமொன்றே ஆதிகாலத்திலிருந்து சிரஞ்சீவியாக இருந்து வருவதற்கும், நம்முடைய நாகரிகமே உலகத்தின் மற்ற நாகரிகங்களை விட மகோன்னதமாக இருந்து வருவதற்கும் காரணம் மற்ற மதங்களில் இல்லாத இந்த வர்ணதர்மம் தான் என்று தெரியும்*.
மற்ற மதங்களில் ஜாதி தர்மம் என்று மூல நூல்களில் இல்லாவிட்டாலும், பிற்பாடு அவைகளிலும் ஒன்று சேர முடியாத பல பிரிவுகள் ஏற்பட்டுத்தான் இருக்கின்றன. இவர்கள் ஒருத்தருக்கொருத்தர் விவாஹ ஸம்பந்தம் செய்து கொள்ளாமல் தனித்தனி ஜாதி மாதிரிதான் இருக்கிறார்கள். இப்படி முஸ்லீம்களில் ஸியா, ஸுன்னி, அஹமதியா என்று பிரிந்திருக்கிறார்கள். அது தவிர இங்கே பட்டாணி, லப்பை என்று இருப்பவர்கள் கூட பரஸ்பர விவாஹ ஸம்பந்தம் செய்வதில்லை. கிறிஸ்துவர்களில் காதலிக், பிராடெஸ்டென்ட், கிரீக் சர்ச் என்ற பிரிவினர்களும் இப்படியே. ஆனாலும் Division of Labour [தொழில் பாகுபாடு] என்ற உன்னத தத்வத்தின் மீது ஒரு லெவலில் மட்டும் பிரிந்திருந்து இன்னொரு லெவலில் ஐக்கியமாயிருக்கிற நம் ஜாதி முறையை, இம்மாதிரியில்லாமலே பிரிந்திருக்கிற அவர்கள் நிந்தித்துப் பேசுகிறார்கள். அதற்கு பதில் சொல்லக்கூட நமக்குத் தெரியவில்லை.