உபவேதங்களில் ஒவ்வொன்றையும் மூலவேதம் ஒவ்வொன்றிலிருந்து வந்ததாகச் ஸசொல்வதுண்டு. இதன்படி முதலாவதான ஆயுர்வேதம் ரிக்வேதத்தைச் சேர்ந்தது*. ரிக் வேதத்துக்குப் ‘புஷ்டியைத் தரவல்லது’ என்று பொருள்படுவதான ‘பௌஷ்டிகம்’ என்றே ஒரு பெயர் உள்ளது. இரண்டாவதான தநுர்வேதம் யஜுர் வேதத்தையும், மூன்றாவதான காந்தர்வ வேதம் ஸாம வேதத்தையும், நான்காவதான அர்த்தசாஸ்திரம் அதர்வ வேதத்தையும் சேர்ந்தவை.
தநுர்வேதத்தில் அஸ்திரப் பிரயோகம் செய்யும் போது வாருணாஸ்த்ரம், ஆக்நேயாஸ்தரம், ப்ரஹ்மாஸ்த்ரம் போன்றவற்றை வருணன், அக்னி, பிரம்மா முதலிய அந்தந்த தேவதைகளுக்குரிய மந்திரத்தோடுதான் விட (எய்ய) வேண்டும். மந்த்ர சக்திதான் இங்கே ஆயுதத்தைவிட முக்யம். இந்த மந்த்ர ப்ரயோகங்களை அதர்வவேதம்தான் கூறுகிறது. ஆகையால் தநுர் வேதத்துக்கு அதர்வ ஸம்பந்தமும் இருப்பதாக ஆகிறது.