இதில் ஒரு அம்சமாகத்தான், ஸொத்து இருக்கிறவனுக்கு மட்டும்தான் சட்டஸபை, நகரஸபை ஆகியவற்றில் அங்கம் வஹிக்கத் தகுதி உண்டு என்றால் அது ஒரு Vested Interest (ஒரு குறிப்பிட்ட கும்பலின் நலனை மட்டும் நிலைப்படுத்தும் பட்சபாத அக்கறை) என்று கண்டனம் செய்து, ஸகல ஜனங்களுக்கும் தகுதி உண்டு என்று பண்ணியிருப்பது.
ஆனாலும் இப்போதும் அபேக்ஷகர் டெபாஸிட் தொகை என்று ஒன்று கட்டவேண்டும் என்று வைத்திருக்கிறார்கள். பொழுது போகாமல் எவன் வேணுமானாலும் தேர்தலுக்கு நின்றுவிடப் படாதே என்பதற்காக இப்படி வைத்திருப்பதாகச் சொல்லலாமாயினும், ஏழை இந்தியாவில் டெபாஸிட் தொகைக்குக்கூட வக்கில்லாமல் எத்தனையோ பேர் இருப்பார்கள் என்பதைப் பார்க்கும்போது இது இவர்கள் பெரிதாகச் சொல்கிற ஸமத்வத்துக்கு விரோதமானதுதான். பொருளில்லாத ஒரு அபேக்ஷகன் டெபாஸிட்டுக்காகவே ஒருவன் தயவை நாடவேண்டியதாகும். இதுவே ‘கரப்ஷ’னுக்கும், பட்சபாதச் சலுகைக்கும் வழி திறப்பதாக ஆகலாம். வரி கட்டும் தன் ஸொந்த நிலம், ஸொந்த மனைக்கட்டில் வீடு முதலிய ஜவேஜி அபேக்ஷகருக்கு இருக்க வேண்டும் என்று விதி செய்தபோது இந்த ஊழலம்சத்துக்கு இடமில்லை.