‘வரி கட்டும் ஸொத்தின் பரிபாலனத்தில் ஒருத்தனுக்கு உள்ள அக்கறை, அபிமானம், சிக்கனம் முதலியன வரி கட்டாத ஸொத்து விஷயமாக இருக்காது; எனவே இப்படிப் பட்டவனிடம் ஊர் ஸொத்தை ஒப்படைக்கப்படாது’ என்பது போலவே இன்னொன்று. ஸொந்த பூமியிலே வீடு கட்டிக் கொள்ளாமல் ஏதோ புறம்போக்கை வளைத்துப் போட்டு தன்னுடையதாய் ஜீர்ணம் செய்துகொண்டு அதிலே வீடு கட்டிக்கொண்டவனென்றால், இப்படி வளைத்துப் போட்டு ஏப்பம் விடுகிற ஸமாசாரத்தை நாளைக்கு ஸபையின் வ்யவஹாரத்திலும் அவன் மேற்கொள்ளக்கூடும். அதனால் தான் க்ராம ஸபைக்கு மெம்பராகிறவன் ‘தன்மனையிலே அகமெடுத்துக் கொண்டிருப்பவ’னாக இருக்க வேண்டுமென்று விதி செய்திருக்கிறார்கள். பொது வ்யவஹாரத்தின் சுத்திக்காக இப்படியெல்லாம் தர்மவேலி போட்டிருப்பதை ஜனநாயகம் என்ற மயக்கத்தில் கண்டனம் செய்வதும், அவிழ்த்து விடுவதும் ஜன ஸமூஹத்துக்குச் செய்கிற அபகாரமாகவே முடியும்.