“பாத பங்கேருஹ த்வந்த்வம்”: தாமரை போன்ற பாத இரட்டை. ‘பங்கேருஹம்’ என்றாலும் ‘பங்கஜம்’ என்றாலும் ஒரே அர்த்தந்தான். பங்கம் என்றால் சேறு. சேற்றில் முளைப்பது பங்கஜம் அல்லது பங்கேருஹம். அழுக்கேயில்லாமல் பரம நிர்மலமாக, அழகாக உள்ள தாமரை அழுக்கான சேற்றில் பிறக்கிறது. எங்கே பிறந்தாலும் உயர்வாக, சிரேஷ்டமாக உருவாகலாம் என்று ஞாபகப்படுத்துவதற்காக அழகான தாமரைக்குச் ‘சேற்றில் பிறந்தது’ என்று பேர் வைத்திருக்கிறார்கள். நீரில், நீர்நிலையில் பிறப்பதால் நீரஜம், அம்போருஹம், ஸரஸிஜம், குட்டையைக் குழப்பி உண்டான சேற்றில் உண்டாவதால் பங்கேருஹம். குழம்பிக்கிடக்கிற நம் மனஸிலும் மலர்ந்திருப்பது பகவானின் பாத தாமரை.