தேசிக ரூபேண தர்சிதாப்யுதயாம்
ஆனதினாலே, ஈச்வரனேதான் குருவாக வந்திருக்கிறான் என்று வைத்துக் கொண்டுவிட்டால் – ‘வைத்துக்கொள்வது’ என்றால் கல்பிதமாக இப்படி அபிப்ராயம் ஏற்படுத்திக் கொள்ளுகிற மாதிரி த்வனிக்கிறது. அதனாலே கொஞ்சம் மாற்றிச் சொல்கிறேன். ஈச்வரனே குருவாக வந்திருக்கிறானென்பதுதானே நிஜம்? இதைப் புரிந்து கொண்டுவிட்டால் – அப்புறம் ஈச்வரனிடமும் பக்தி, அதே அளவுக்கு குருவிடமும் பக்தி என்று இரண்டு பக்திகளைச் சொல்லவேண்டியதில்லை. குருவே ஈச்வரன் என்று அந்த ஒருவரிடமே பூர்ணமாக மனஸைக் கொடுத்து ஒரே பக்தியாகப் பண்ணவேண்டுமென்று ஆகிவிடும்.
இப்படி குரு ரூபத்தில் வந்திருக்கிற ஈச்வரனிடத்தில், அல்லது ஈச்வரனின் மநுஷ்ய ரூபமான குருவினிடத்தில் உயர்ந்த பக்தியை, பராபக்தி என்கிற உத்தமான பக்தியைச் செலுத்திவிட்டாலே உபதேசத்தின் உட்பொருளெல்லாம் உள்ளநுபவமாகப் புரிந்து அநுபூதி – ஜனன மரண நிவ்ருத்தியான மோக்ஷபதம் – கிடைத்துவிடும்.