மொத்தத்தில் — இத்தனை நாழி நீட்டி முழக்கிச் சொன்னதற்கெல்லாம் ஸாரமாக — அப்போது தேச நிலைமை எப்படியிருந்ததென்றால், பூர்ணமான வைதிக மதம் மிகவும் க்ஷீணித்துப் போயிருந்தது; வைதிகம் என்று சொல்லிக் கொண்டே அப்படியில்லாத மதங்களும், வைதிகத்தைவிடத் தாங்கள்தான் நிஜமாகப் பரமாத்மாவின் ஆஜ்ஞையை அநுஸரித்து உண்டானவை என்று சொல்லிக்கொண்ட தாந்த்ரிக மதங்களும், வேதம்–பரமாத்மா என்ற இரண்டையுமே அடியோடு தள்ளிவிட்ட அவைதிக மதங்களுமாக மொத்தம் எழுபத்திரண்டு தடபுடலாகக் கிளம்பியிருந்தன.
மநுஷ்யராகப் பிறந்த எவரும் ஸரிசெய்ய முடியாத துர்பாக்யமான நிலைமை நம்முடைய புராதனமான மத நாகரிகத்திற்கு ஏற்பட்டுவிட்டது. இதிலேயே பெரிய பாக்யமாக ஈச்வரனேதான் அவதாரம் செய்தாகணும் என்றும் ஏற்பட்டுவிட்டது!
இங்கேதான் க்ருஷ்ண பரமாத்மா வருகிறார். அவரைத் தானே முதலில் நிறையக் குறிப்பிட்டேன்? அதற்குக் காரணமான link — பகவத்பாதாளின் அவதாரத்தில் க்ருஷ்ணரின் தொடர்பு — என்ன என்பதற்கு வருகிறோம்.