கடைசிப் பேருக்கு வந்துவிட்டோம். “ஸ்கந்த பூர்வஜர்” என்பது ஷோடச நாமாவில் கடைசி. ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிக்குத் தமையனார் என்று அர்த்தம். முருகனுக்கு மூத்தவர். அதைவிட, ‘முருகனுக்கு முன்னவர்’ என்றால் அழகாக இருக்கிறது.
‘பூர்வஜர்’ என்றால் முன்னால் பிறந்தவர். ‘அக்ரஜர்’ என்றும் சொல்வதுண்டு.
‘உடன்பிறப்பு’ என்று தமிழில் சொல்வதுபோல் ஸம்ஸ்க்ருதத்தில் ‘ஸஹோதரர்’. ‘ஸஹ’ என்றால் ‘உடன்’. ஸஹோதரர் என்றோ உடன்பிறப்பு என்றோ சொன்னால் அண்ணாவா, தம்பியா என்று கண்டுபிடிக்க முடியாது. அண்ணா என்று குறிப்பிட்டுக் காட்டும் வார்த்தை ‘பூர்வஜர்’. இதேமாதிரி தம்பிக்கு ‘அநுஜர்’. ராமாநுஜர் என்றால் ராமனுக்குத் தம்பியான லக்ஷ்மணர். ‘கஜமுகாநுஜர்’ என்று ஸுப்ரம்மண்யருக்கு ‘அமர’த்தில் ஒரு பெயர் சொல்லியிருக்கிறது. பிள்ளையாருக்குத் தம்பி என்றே முருகனுக்கு ஒரு பேர்; அவருக்கு அண்ணா என்றே இவருக்கும் ஒரு பேர்! அப்படிப்பட்ட ஸஹோதர பாந்தவ்யம்!