அக்ஷர, ஸ்வர சுத்தம் மாறினால், ஒரு மந்திரத்தின் பலன் ஏற்படாது என்பதோடு மட்டுமின்றி விபரீத பலனே உண்டாகிவிடும் என்பதால், மந்திர அநுஸந்தானத்தில் பரம ஜாக்ரதையாக இருக்க வேண்டும். இதை வலியுறுத்திச் சொல்கிற கதையொன்று வேதத்திலேயே தைத்திரீயத்தில் வருகிறது. (தைத்திரீய ஸம்ஹிதை – II.4.12.)
த்வஷ்டா என்கிறவன் ஒரு காரணத்துக்காக, ‘இந்திரன் மேல் பழி தீர்த்துக் கொள்ளவேண்டும், அவனைக் கொல்லக் கூடிய பிள்ளையைப் பெறவேண்டும்’ என்று நினைத்து, ஒரு மந்திரம் சொல்லி ஹோமம் பண்ணுகிறான். “இந்த்ர சத்ருர் வர்தஸ்வ” என்று அந்த மந்திரத்தைச் சொல்லும் போது ‘இந்த்ர’ என்பதை ஏற்றல் இறக்கல் இல்லாமல் ஸமமாகவும், ‘சத்ரு’ என்பதில் ‘த்ரு’வைத் தூக்கியும் (உதாத்தமாகவும்) , ‘வர்தஸ்வ’ என்பதில் ‘ர்த’ வையும் இப்படியே தூக்கியும் சொல்லியிருக்கவேண்டும். அப்படிச் சொன்னால் த்வஷ்டாவின் பிள்ளை, ‘இந்திரனைக் கொல்லுபவனாக வளரட்டும்’ என்ற அர்த்தம் ஏற்படும். ஸ்வர சக்தியாலேயே அவன் அப்படி வளர்ந்து, இந்திரனை வதம் பண்ணியிருப்பான். ஆனால் த்வஷ்டா உச்சரிப்பிலே தப்புப் பண்ணிவிட்டான். அதாவது, ‘இந்த்ர’ என்பதில் ‘த்ர’வைத் தூக்கியும், ‘சத்ரு’ என்பதை ஸமமாகவும், ‘வர்தஸ்வ’ என்பதில் ‘ர்த’வை ஏற்றுவதற்குப் பதில் இறக்கி அநுதாத்தமாகவும் சொல்லிவிட்டான். இதனால் ‘இந்த்ரனை இவன் கொல்பவனாக வளரட்டும்’ என்பதற்குப் பதில், ‘இந்திரன் இவனை கொல்பவனாக வளரட்டும்’ என்று அர்த்தம் தலைகீழாக மாறிவிட்டது! வார்த்தைகளும் எழுத்துக்களும் மாறாவிட்டாலும்கூட, ஸ்வரங்களில் ஏற்பட்ட பிழையாலேயே த்வஷ்டா வேண்டியதற்கு நேர்மாறான பலன் உண்டாகிவிட்டது! இவனுடைய பிள்ளையை இந்திரன் வதம் பண்ணிவிட்டான்! த்வஷ்டாவின் பிள்ளையான விருத்திரன் இந்திரனால் கொல்லப்படுவதற்கு அவன் தகப்பனாரே இப்படிக் காரணபூதனாகி விட்டான்.